தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - பகுதி -4
ஆறாம் வகுப்பு - இலக்கணம் - இயல் - 4
இன எழுத்துகள்
சில எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு. இவ்வாறு ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
ஆறு வல்லின மெய் எழுத்துகளுக்கும் ஆறு மெல்லின எழுத்துகளும் இன எழுத்துகள் ஆகும்.சொற்களில் மெல்லின மெய் எழுத்தை அடுத்துப் பெரும்பாலும் அதன் இனமாகிய வல்லின எழுத்து வரும். எ .கா : திங்கள், மஞ்சள், மண்டபம், சந்தனம், அம்பு, தென்றல்
இடையின எழுத்துகள் ஆறும் (ய், ர், ல், வ், ழ், ள்) ஒரே இனமாகும்.
மெய்யெழுத்துகளைப் போலவே உயிர் எழுத்துகளிலும் இன எழுத்துகள் உண்டு. உயிர் எழுத்துகளில் குறிலுக்கு நெடிலும், நெடிலுக்குக் குறிலும் இன எழுத்துகள் ஆகும். குறில் எழுத்து இல்லாத ஐ என்னும் எழுத்துக்கு இ என்பது இன எழுத்தாகும். ஔ என்னும் எழுத்துக்கு உ என்பது இன எழுத்தாகும்.சொல்லில் உயிர் எழுத்துகள் சேர்ந்து வருவது இல்லை. அளபெடையில் மட்டும் நெடிலைத் தொடர்ந்து அதன் இனமாகிய குறில் எழுத்து சேர்ந்து வரும். ஆஅ, ஈஇ, ஊஉ, ஏஎ, ஐஇ, ஓஒ, ஔஉ (எ. கா.) ஓஒதல், தூஉம், தழீஇ
தமிழ் எழுத்துகளில் ஆய்த எழுத்துக்கு மட்டுமே இன எழுத்து இல்லை.


Hi Please, Do not spam in Comments