தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - பகுதி -3
ஆறாம் வகுப்பு - இலக்கணம் - இயல் - 3
மொழி முதல், இறுதி எழுத்துகள்
சொல்லின் முதலிலும் இடையிலும் இறுதியிலும் எந்ததெந்த எழுத்துகள் வரும் என்பதை அறிந்து கொள்வதால் மொழியை நன்கு பேசமுடியும்.பிழையின்றி எழுத எந்ததெந்த எழுத்துகளை எங்கெங்குப் பயன்படுத்த வேண்டும் என்று அறிந்துகொள்வதும் மிக இன்றியமையாதது.
மொழி முதல் எழுத்துகள்
மொழி என்பதற்குச் சொல் என்னும் பொருளும் உண்டு.சொல்லின் முதலில் வரும் எழுத்துகளை மொழிமுதல் எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் சொல்லின் முதலில் வரும்.
- க, ச, த, ந, ப, ம ஆகிய வரிசைகளில் உள்ள எல்லா உயிர்மெய் எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் சில எழுத்துகள் மட்டுமே சொல்லின் முதலில் வரும்.
- ங - வரிசையில் ‘ங’ என்னும் ஓர் எழுத்து மட்டுமே சொல்லில் முதல் எழுத்ததாக வருகிறது. எ.கா- ஙனம். இக்காலத்தில் ஙனம் என்னும் சொல் தனித்து இயங்காமல் அங்ஙனம், இங்ஙனம், எங்ஙனம் என்னும் சொற்களில் மட்டுமே வழங்கி வருகிறது.
- ஞ - வரிசையில் ஞ, ஞா, ஞெ, ஞொ ஆகிய நான்கு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- ய - வரிசையில் ய, யா, யு, யூ, யோ, யௌ ஆகிய ஆறு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
- வ - வரிசையில் வ, வா, வி, வீ, வெ, வே, வை, வெள ஆகிய எட்டு எழுத்துகளும் சொல்லின் முதலில் வரும்.
மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்
- மெய்யெழுத்துகள் பதினெட்டும் சொல்லின் முதலில் வாரா.
- ட,ண,ர,ல,ழ,ள,ற,ன ஆகிய எட்டு உயிர்மெய் எழுத்துகளின் வரிசையில் ஓர் எழுத்து கூடச் சொல்லின் முதலில் வராது.
- ஆய்த எழுத்து சொல்லின் முதலில் வராது.
- ங, ஞ, ய, வ ஆகிய உயிர்மெய் எழுத்து வரிசைகளில் மொழி முதலில் வருவதாகக் குறிப்பிடப்பட்ட எழுத்துகள் தவிர பிற எழுத்துகள் சொல்லின் முதலில் வாரா.
மொழி இறுதி எழுத்துகள்
சொல்லின் இறுதியில் வரும் எழுத்துகளை மொழி இறுதி எழுத்துகள் என்பர்.
- உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் மெய்யுடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே மொழி இறுதியில் வரும்.
- ஞ், ண், ந், ம், ய் ,ர், ல், வ், ழ், ள், ன் ஆகிய மெய்யெழுத்துகள் பதினொன்றும் மொழியின் இறுதியில் வரும். (உரிஞ், வெரிந், அவ்)
மொழி இறுதியாகா எழுத்துகள்
- சொல்லின் இறுதியில் உயிரெழுத்துகள் தனித்து வருவதில்லை.உயிர் எழுத்துகள் மெய்யெழுத்துடன் இணைந்து உயிர்மெய்யாக மட்டுமே சொல்லின் இறுதியில் வரும்.அளபெடை எழுத்துகளில் இடம் பெறும் போது உயிர் எழுத்துகள் சொல்லின் இறுதியில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இறுதியில் வராது.
- க், ங், ச், ட், த், ப், ற் ஆகிய ஏழு மெய் எழுத்துகளும் சொல்லின் இறுதியில் வருவதில்லை.
- உயிர்மெய் எழுத்துகளுள் ‘ங’ எழுத்து வரிசை சொல்லின் இறுதியில் வராது.
- எகர வரிசையில் கெ முதல் னெ முடிய எந்த உயிர்மெய் எழுத்தும் மொழி இறுதியில் வருவதில்லை.
- ஒகர வரிசையில் நொ தவிர பிற உயிர்மெய் எழுத்துகள் மொழி இறுதியில் வருவதில்லை.
- நொ என்னும் எழுத்து ஓரெழுத்து ஒரு மொழியாகத் துன்பம் என்னும் பொருளில் வரும்.
சொல்லின் இடையில் வரும் எழுத்துகள்
- மெய் எழுத்துகள் பதினெட்டும் சொல்லின் இடையில் வரும்.
- உயிர்மெய் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.
- ஆய்த எழுத்து சொல்லின் இடையில் மட்டுமே வரும்.
- அளபெடையில் மட்டுமே உயிர் எழுத்துகள் சொல்லின் இடையில் வரும்.


Hi Please, Do not spam in Comments