தமிழைப் பிழையின்றி எழுதுவோம் - பகுதி -1
ஆறாம் வகுப்பு - இலக்கணம் - இயல் - 1
தமிழ் எழுத்துகளின் வகையும் தொகையும்
உலகில் உள்ள ஒவ்வொரு பொருளையும் மனிதன் உற்றுநோக்கினான். அவற்றின் இயல்புகளை அறிந்துகொண்டான். இவ்வாறே மொழியையும் ஆழ்ந்து கவனித்தான். மொழியை எவ்வாறு பேசவும் எழுதவும் வேண்டும் என்பதை வரையறை செய்தான். அந்த வரையறைகளே இலக்கணம் எனப்படும்.
தமிழ் மொழியின் இலக்கண வகைகள் ஐந்து.
- எழுத்து இலக்கணம்
- சொல் இலக்கணம்
- பொருள் இலக்கணம்
- யாப்பு இலக்கணம்
- அணி இலக்கணம்
எழுத்து
ஒலி வடிவமாக எழுப்பப்படுவதும், வரிவடிவமாக எழுதப்படுவதும் எழுத்து எனப்படுகிறது.
உயிர் எழுத்துகள்
உயிருக்கு முதன்மையானது காற்று. இயல்பாகக் காற்று வெளிப்படும்போது உயிர் எழுத்துகள் பிறக்கின்றன. வாயைத் திறத்தல், உதடுகளை விரித்தல், உதடுகளைக் குவித்தல் ஆகிய எளிய செயல்பாடுகளால் 'அ' முதல் 'ஔ' வரையுள்ள பன்னிரண்டு உயிர் எழுத்துகளும் பிறக்கின்றன.
உயிர் எழுத்துகள்(12) : அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ
- அ, இ, உ, எ, ஒ - ஆகிய ஐந்தும் (5) குறுகி ஒலிக்கின்றன.
- ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ - ஆகிய ஏழும் (7) நீண்டு ஒலிக்கின்றன.
- குறுகி ஒலிக்கும் அ, இ, உ, எ, ஒ ஆகிய ஐந்தும் (5) குறில் எழுத்துகள்.
- நீண்டு ஒலிக்கும் ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய ஏழும்(7) நெடில் எழுத்துகள்.
மாத்திரை
- ஒவ்வோர் எழுத்தையும் உச்சரிப்பதற்குக் கால அளவு உண்டு.
- எழுத்ததை உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் கால அளவைக் கொண்டே குறில், நெடில் என வகைப்படுத்துகிறோம்.
- மாத்திரை என்பது இங்குக் கால அளவைக் குறிக்கிறது. ஒரு மாத்திரை என்பது ஒருமுறை கண் இமைக்கவோ ஒருமுறை கைநொடிக்கவோ ஆகும் கால அளவாகும்.
- குறில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 1 மாத்திரை
- நெடில் எழுத்தை ஒலிக்கும் காலஅளவு - 2 மாத்திரை
மெய்யெழுத்துகள்
- மெய் என்பது உடம்பு எனப் பொருள்படும். மெய் எழுத்துகளை ஒலிக்க உடல் இயக்கத்தின் பங்கு இன்றியமையாதது.
- மெய் எழுத்துகள் ஒலிக்கும் கால அளவு - அரை மாத்திரை
மெய்யெழுத்துகள் (18): க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்
- வல்லினம்(6) - க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறும் வன்மையாக ஒலிக்கின்றன.
- மெல்லினம்(6) - ங், ஞ், ண், ந், ம், ன் ஆகிய ஆறும் மென்மையாக ஒலிக்கின்றன.
- இடையினம்(6) - ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் வன்மையாகவும் இல்லாமல், மென்மையாகவும் இல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டு ஒலிக்கின்றன.
உயிர்மெய்
- மெய் எழுத்துகள் பதினெட்டுடன்(18) உயிர் எழுத்துகள் பன்னிரண்டும்(12) சேர்வதால் தோன்றும் 216 எழுத்துகளும் உயிர்மெய் எழுத்துகள் ஆகும்.
- மெய்யுடன் உயிர்க்குறில் சேர்ந்ததால் உயிர்மெய்க் குறில் தோன்றுகிறது.
- மெய்யுடன் உயிர் நெடில் சேர்ந்ததால் உயிர்மெய் நெடில் தோன்றுகிறது.
- ஆகவே உயிர்மெய் எழுத்துகளையும் உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் என இருவகைப்படுத்தலாம்.
ஆய்த எழுத்து
- தமிழ் மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எழுத்துகள் தவிர தனி எழுத்து ஒன்றும் உள்ளது. அது ஃ என்னும் ஆய்த எழுத்ததாகும்.
- ஆய்த எழுத்ததை ஒலிக்க ஆகும் காலஅளவு - அரை மாத்திரை


Hi Please, Do not spam in Comments